கும்பகோணம் நல்ல கும்பகோணம் !
கும்பகோணத்தில்.....
• பெரிய கடை தெருவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்களமாக இருக்கும்.
• ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.
• மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபே-யின் முறுகல் மாவு தோசை + சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.
• சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ். இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும் . கும்பகோணத்தில் இன்றும் பூரியை Boori என்றுதான் அழைப்பார்கள்...!
• கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல்.
இப்போது hifi ஆக மாறிவிட்டது.
அதன் காபி......டம்ளரை கீழே வைக்க மனமே வராது.
• சாரங்கபாணி கோயில் அருகே உள்ள மாமி மெஸ். இங்கே காலையில் கீரை வடை. மதியம் சாப்பாடுக்கு இடம் கிடைக்காது. அப்படி இடம் பிடித்து மசால் வடையுடன் சாப்பாடு... அப்பப்பா... என்ன சுவை !
• நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ்..
இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்.
இங்கு மட்டும் வாழை இலை கிடையாது.
வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி.
இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும்.
so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.
• பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம்.
அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.
இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி.
அதற்கு ஊற்றிக்கொள்ள அந்தக்கால injection பாட்டிலில் நல்லெண்ணெய்.
• இதில் எந்த ஹோட்டல் சென்றாலும் எது சாப்பிட்டாலும் முடிவு என்பது காபியோடுதான் என்பது எழுதப்படாத சட்டம் !
• காரசராமான டிபன் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவாமல் வாய் கொப்பளிக்காமல் காபியை அப்படியே வாயில் சரித்துக்கொள்ளும்போது நம் நாக்கின் சுவையானது.... இன்னும் கொஞ்சம் காரமாகி மூன்றே நொடிகளில் இனிப்புக்கும் மாறும் அந்த நேரம் இருக்கிறதே...! அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் !
